உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய அவர், தனது உரையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்: “ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு இதுவரை உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத்தொகை வழங்கப்படும். எந்த பெண்ணும் தவறவிடப்படமாட்டார்,” என உறுதியளித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மகளிர் உரிமைத்திட்டம் சிறப்புகள்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.
மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.



