மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ‘ வழங்கப்படும் எனவும் அது தொடர்பாக வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி பயனுள்ள ஒருவரும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என தெரிவித்திருந்தார்.

உரிமைத்தொகை – விண்ணப்பிக்கும் நடைமுறைகள்

* குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

* இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

* ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

குடும்பத்தலைவி வரையறை

* குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

* ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி, இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

* குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

* குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.

* திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

* ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத் தகுதிகள்

* ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

* 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

* ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்

கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

* ரூபாய் 2.5 லட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

* குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

* மாநில, மத்திய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

* சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

* ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும்மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

* ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

விதிவிலக்குகள்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

திடீர் திருப்பம்...! தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்...! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு...!

Tue Jul 11 , 2023
டெல்லியில்‌ ஜூலை 18ம்‌ தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ பங்கேற்க அதிமுக பொதுச்‌ செயலாளர்‌ எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் உள்ளது, தற்பொழுது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முக்கிய கூட்டம் ஒன்றை […]
Edappadi Eps

You May Like