ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஜிம்பாப்வேயில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 6 சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இலங்கை – நெதர்லாந்து அணிகள், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றன. இந்த நிலையில், இரு அணிகளும் தகுதிச்சுற்றின் பைனல் போட்டி நேற்று நடைபெற்றன. முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 47.5 ஓவரில் 233 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சஹான் அராச்சிகே 57, குசால் மெண்டிஸ் 43, சரித் அசலங்கா 36, ஹசரங்கா 29, நிசங்கா 23, சமரவிக்ரமா 19 ரன் எடுத்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் வான் பீக், ரையன் கிளைன், விக்ரம்ஜித், ஸுல்பிகர் தலா 2, ஆர்யன் தத் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 49 ரன்களுக்கே அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. விக்கெட்டுகள் சரிந்ததால், அந்த அணி 23.3 ஓவரிலேயே 105 ரன்னுக்கு சுருண்டது. மேக்ஸ் ஓ தாவுத் 33, வான் பீக் 20*, விக்ரம்ஜித் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் தீக்ஷனா 4, மதுஷங்கா 3, ஹரங்கா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்படி, இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தகுதிச்சுற்று கோப்பையை முத்தமிட்டது. தில்ஷன் மதுஷங்கா ஆட்ட நாயகன் விருதும், நெதர்லாந்து வீரர் ஷான் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.