துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துவிட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அலி காகாஸ் என்ற மீட்புக் குழு உறுப்பினர், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த பூனை ஒன்றை உயிருடன் காப்பாற்றியுள்ளார். நன்றியுள்ள அந்த பூனையோ காப்பாற்றிய அலி காகாஸை விட்டு விலக மறுத்ததோடு, அவருடனேயே பயணிக்கவும் துவங்கியுள்ளது. இதனால் நெகிழ்ந்து போன அலி காகாஸ், அந்த பூனையை தத்தெடுத்து, அதற்கு ‘என்காஸ்’ என பெயரும் வைத்துள்ளார். துருக்கியில் ‘என்காஸ்’ என்பது ‘இடிபாடுகள்’ என்று அர்த்தம்.

இந்த நிகழ்வை உக்ரேனிய உள்நாட்டு விவகார அமைச்சகத்தின் முன்னாள் துணை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோவின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, பூனையுடன் இருக்கும் அலி காகாஸ் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். பின்னர் இப்பதிவு வைரல் ஆகி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்து அதிகம் பகிரப்பட்டு, அவர்களை உருகவும் வைத்துள்ளது. எந்த ஒரு சோகமும், பேரழிவும் எங்கு நிகழ்ந்தாலும், எப்படிப்பட்ட துயரத்தை நமக்கு கொடுத்தாலும்… அன்பும், மனிதநேயமும் மட்டும் இருந்தால் எத்தகைய வீழ்ச்சிகளிலிருந்தும் இம்மானுடத்தை காத்துவிட முடியும் என்பதற்கு சான்றாக ‘என்காஸ்’ அலி காகாஸ் மீது வைத்த அன்பு நமக்கு உணர்த்துகிறது.