தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்பது தொடர்பாக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் என மொத்தமாக 31,129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனியார் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டர் பயணிப்பதற்கான கட்டணத்தை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி தான், தனியார் பேருந்துகளில் கட்டணம் அதன்படி பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 50% உயர்த்தப்பட்டது. அதன்பின், தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சூழலில் தான், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணங்களை மாற்றியமைக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தான், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர் மட்டக்குழு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ”போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை 600 032” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தங்கள் கருத்துக்களை 3 வார காலத்துக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளது.