தமிழக அரசியலின் ஆகச்சிறந்த அடையாளமாக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் முன்வைத்துள்ள மிகக்கடுமையான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
தலைவர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய், மது அருந்திவிட்டு போதையில் வந்திருந்ததாக நக்கீரன் கோபால் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஆவேசமாகப் பேசிய அவர், “விஜய் நின்ற இடத்தை சுற்றியுள்ள பகுதியில் மது வாடை கடுமையாக வீசியது. அவர் போதையில் அஞ்சலி செலுத்த வந்தது ஒரு மாபெரும் தியாகியை அவமதிக்கும் செயலாகும். அங்கிருந்த பலரும் அந்த வாடை தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொள்ளும் அவலம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார். ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க விரும்புபவர், இத்தகைய பொது நிகழ்வுகளில் கண்ணியத்தை கடைப்பிடிக்காதது முறையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் விஜய்யின் அணுகுமுறை குறித்தும் கோபால் அதிருப்தி வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மூத்த கலைஞர்கள் உரிய மரியாதையுடன் அமர்ந்து சென்றதை சுட்டிக்காட்டிய அவர், விஜய் ஏதோ ஒரு கடமைக்காக வந்து சென்றது போல் இருந்ததாக விமர்சித்தார். அங்கு கூடியிருந்த வைகோ, முத்தரசன் போன்ற மூத்த தலைவர்களை விஜய் முறையாக சந்திக்கவோ அல்லது வணக்கம் செலுத்தவோ இல்லை என்பது ஒரு தலைவருக்கு அழகல்ல என்றும் சாடினார். “விஜய்யின் இத்தகைய செயல்பாடுகளைத் தொடர்ந்து தட்டிக்கேட்போம்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து விவகாரங்களையும் இந்த விமர்சனத்தோடு இணைத்துப் பேசிய நக்கீரன் கோபால், “சொந்த மனைவியையே கலங்கச் செய்பவர் எப்படி நாட்டு மக்களுக்கு நல்ல தலைவராக முடியும்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் மீது மக்கள் அனுதாபம் கொள்வார்கள் என்ற தவெக தரப்பின் வாதத்தை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
Read More : பெண் உருவத்தில் சிவபெருமான்..!! இந்த அதிசய கோயில் எங்கிருக்கு தெரியுமா..? வரலாற்று பின்னணி இதோ..!!



