கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் விஷ்வா (20), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை திருமணம் செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்வாவுக்கு, புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய விஷ்வா, தன்னுடைய கிராமத்திற்கு வருமாறு அச்சிறுமியை அழைத்துள்ளார்.
விஷ்வாவின் பேச்சை நம்பிய அச்சிறுமி, கடந்த 19ஆம் தேதி விஷ்வாவின் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து விஷ்வா அச்சிறுமியை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர், தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, விஷ்வா அச்சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்த போலீசார், இளைஞர் விஷ்வாவை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். திருமணம் செய்து வைத்த விபரீதத்திற்காக கைது செய்யப்பட்ட விஷ்வாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



