திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் பகுதியை அடுத்துள்ள எடையூர் சங்கேந்தி கர்ணகொடை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் கீதா (28). இவர், அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
காலப்போக்கில், கணவர் சரண்ராஜுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில், கீதா தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இந்த சண்டைகள் அதிகரித்ததால், மனமுடைந்த கீதா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஓராண்டாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சரண்ராஜ் தனது கள்ளக்காதலியை 2-அது திருமணம் செய்யப்போவதாக கீதாவுக்கு தகவல் கிடைத்தது. இது கீதாவை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. கணவரின் திருமணச் செய்தி அறிந்த கீதா, கடும் மன உளைச்சலில் இருந்தார். தனது குழந்தைகளையும், குடும்பத்தையும் நினைத்து கண்ணீர் வடித்த அவர், இறுதியில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



