அழகாக இல்லை என்று கூறி மனைவியை தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்த கணவரால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை அடுத்த அரூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி (40). இவரது மனைவி நீது (33). இவர்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அழகாக இல்லை என்று கூறி மனைவியை கணவர் உண்ணி அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு செல்வதை நீது வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர், மாமியார் வீட்டுக்கு சென்று கணவர் சமாதானம் செய்து மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வார். ஆனால், அதன் பிறகு மீண்டும் நீதுவை உண்ணி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
நாளுக்கு நாள் உண்ணியின் நடவடிக்கை மோசமடைந்து நீதுவுக்கு உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்ல பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட எதையும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால், மனமுடைந்துபோன நீது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, மகள் தற்கொலைக்கு உண்ணி தான் காரணம் என நீதுவின் பெற்றோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து உண்ணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.