கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியில், மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, அதை ‘தீய சக்திகளின் தாக்கம்’ என்று நம்பிய கணவரும் மாமனாரும், மந்திரவாதியுடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை மாந்திரீக பூஜை என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவச்சியூரை சேர்ந்த அகில் (26) என்பவர் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் அகிலின் மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, அதை தீய சக்திகளின் செயல் என்று அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்பினர். இதனால், பட்டினத்திட்டா பகுதியை சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை அணுகினர். அவர், மாந்திரீக பூஜைகள் செய்தால் மனைவி நலம் பெறுவார் என்று கூறியுள்ளார்.
10 மணி நேர சித்திரவதை :
மந்திரவாதியின் கூற்றுப்படி, அகிலின் வீட்டிலேயே சுமார் 10 மணி நேரம் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பூஜையின்போது, அந்த இளம் பெண்ணை ஒரு இடத்தில் அமர வைத்து, அவருக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்ததுடன், பீடி சாம்பலையும் விழுங்க செய்துள்ளனர். மேலும், மாந்திரீகம் என்ற பெயரில் அவரது உடலின் பல பகுதிகளில் தீயால் சூடு வைத்தும் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளனர்.
மகள் சித்திரவதைக்கு ஆளாவதை பற்றித் தெரியாத பெண்ணின் தந்தை, மகளைப் பார்க்க வீட்டிற்கு வந்தபோது, மகள் நடந்த கொடுமைகளைத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து விசாரணை நடத்திய போலீசார், கணவர் அகில், அவரது தந்தை தாஸ் (55) மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடநம்பிக்கையின் காரணமாக ஒரு பெண் சித்திரவதைக்கு ஆளான இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



