தவெகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் எப்போதும் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தார்.. இதுவரை அதிமுக மீது எந்த விமர்சனங்களையும் முன்வைக்காத விஜய் ஊழல் சக்தி என்று கூறியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது..
மேலும் இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சிக்காத அதிமுக கூட நேற்று காட்டமாக விமர்சித்தது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை தான் என்றும் சாடியிருந்தது.. மேலும் சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்றும் அதிமுக விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.. தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.. ஆனால் எம்.ஜி.ஆரின் கட்சி ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார்.. என்ன பேசுகிறார்.. சினிமா போல் டபுள் ஆக்ஷன் என்று நினைத்துக் கொண்டார்.. நாங்கள் எப்படி அண்ணாவை மறப்போம்.. கட்சி வழிகாட்டியை யாராவது மறப்பார்கள்.. அவர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமெனில் அதை செய்யும்.. தேவையில்லாமல் எங்களை விமர்சித்து வருகிறார்..
ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்று கூறும் விஜய், உங்கள் படத்தை பிளாக் டிக்கெட்டில் விற்று கொள்ளையடிக்கின்றனர்.. உங்கள் திரைப்படத்தில் பிளாக் டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழலை உங்களால் ஒழிக்க முடியவில்லை.. ரூ.150 டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்கின்றனர்.. அந்த ஊழலையே உங்களால் ஒழிக்க முடியவில்லை.. இவர் நாட்டின் ஊழலை பற்றி பேசுகிறார்.. முதலில் வெளியே வாங்க சார்.. வீட்டுக்குள் உட்கார்ந்துக் கொண்டு ஊழலை ஒழிப்போம், கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என்று பேசுகிறார்.. முதலில் வெளியே வந்து ஊடகங்களை சந்தியுங்கள்..” என்று தெரிவித்தார்.



