கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை பகுதியில் விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர் (31) மற்றும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சுகாசினி (29) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது நீண்ட கால பந்தம், இவ்வளவு கொடூரமான முறையில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் குடும்பப் பிரச்சனைகள் இருப்பது தெரியவந்துள்ளது. சேகர் ஒரு திருநங்கையுடன் வாழ்வதை அவரது பெற்றோர் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். சேகருக்கு தெரியாமல் அவருக்குத் தனியாகப் பெண் பார்த்து, வேறொரு திருமணம் செய்து வைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் சுகாசினியின் காதுகளுக்கு எட்டவே, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
“6 ஆண்டுகள் என்னோடு வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றுகிறாயா?” என சுகாசினி கேட்டுள்ளார். சம்பவத்தன்று இருவரும் ஒரு கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்துள்ளனர். வீடு திரும்பிய பின்னரும் அதே விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சேகர், சேலையால் சுகாசினியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக திருநங்கைகள் உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புரூஸ்பேட்டை போலீஸார், உடல்களை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணப் பிரச்சனையாலும் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சேகரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்த பிறகே, இந்த மரணங்களின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மைகள் வெளிவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.



