தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் புரிதல் மற்றும் தொண்டர்களுடனான தொடர்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பேசியதை சுட்டிக்காட்டிய திவ்யா சத்யராஜ், “மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையைப் பார்த்துச் சொல்கிறேன்” என்று விஜய் கூறியது நகைப்பிற்குரியது என்றார். இதனை ஒரு மருத்துவ உதாரணத்தின் மூலம் விளக்கிய அவர், “நாம் ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போது, என்ன ஊசி போட வேண்டும் என்பதைப் புத்தகத்தில் படித்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று அந்த மருத்துவர் கூறினால், அங்கிருந்து நாம் தலைதெறிக்க ஓடிவிடுவோம். அதேபோல்தான் அரசியலும்; மக்களுக்கு என்ன தேவை, அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற அடிப்படை புரிதலே இல்லாத ஒருவரை மக்கள் எப்படி நம்பி வாக்களிப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெக தலைவர் மற்றும் தொண்டர்களுக்கு அவர் ஒரு சுவாரசியமான சவாலையும் விடுத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து அடுத்த 3 நாட்களுக்குள் புகைப்படம் எடுத்துத் தனது சமூக வலைதளப் பக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு தொண்டர்களுக்கு சவால் விடுத்த அவர், விஜய்க்கு நேரடியாக ஒரு கேள்வியை வைத்தார். “உங்களால் பேப்பரைப் பார்க்காமல் உங்கள் கட்சியின் பத்து தொண்டர்களின் பெயர்களையாவது சொல்ல முடியுமா? ஒரு கட்சியின் தலைவருக்கு தனது தொண்டர்களின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம்” என்று திவ்யா சத்யராஜ் சாடினார்.
Read More : இறைவன் நம்மோடு பேசும் மொழி..!! கோயில்களில் நீங்கள் சாமி கும்பிடும்போது இந்த அறிகுறியை கவனிச்சிருக்கீங்களா..?



