தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்கவும், தாலுகா வாரியான மொத்த விற்பனையாளர்களாகச் செயல்படவும் விருப்பம் உள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்தும் தரமான மற்றும் குறைந்த விலை பால் பொருளாக ஆவின் திகழ்ந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஒன்றியம், நாளொன்றுக்கு சுமார் 69,336 லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.1 கோடி மதிப்பிலான பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
பாலகங்கள் (Aavin Parlours), முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் என சுமார் 650-க்கும் மேற்பட்டோர் மூலம் பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பன்னீர், தயிர், மோர், மில்க்ஷேக் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருட்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது.
தற்போதுள்ள முகவர்கள் பலர் அதிக அளவில் ஆவின் பொருட்களை விற்பனை செய்து பொருளாதார ரீதியாகப் பயனடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் ஆவின் விற்பனை நிலையங்கள் அமைத்துச் செயல்பட கூடுதல் முகவர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, ஆவின் விற்பனை நிலையம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், தாலுகா வாரியாக ஆவின் பால் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களாக (Wholesalers) செயல்பட விருப்பமுள்ள நபர்களும் நேரில் வந்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 8015304755, 8015304766, அல்லது 8807983824 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ரயிலில் பயணம் செய்யப்போறீங்களா..? எவ்வளவு கிராம் தங்கம் அணிந்து செல்ல அனுமதி..?



