உலகளவில் புற்றுநோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகளே இந்த அபாயத்திற்கு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிகரெட்டில் உள்ள அதே நிக்கோட்டின் இதிலும் கலந்திருப்பதால், இது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து, புகைப்பிடித்தலை விடவும் மிக தீவிரமான புற்றுநோய் பாதிப்புகளை உருவாக்கும் ‘சைலண்ட் கில்லராக’ மாறுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிவதே உயிர் காக்கும் ஆயுதம் என்கிறார் டாக்டர் கல்பனா.
நீண்ட நாட்களாக குணமாகாத வாய்ப்புண், விடாத தொடர் இருமல், இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் செரிமானக் கோளாறுகள் மற்றும் மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றைச் சாதாரண உடல் உபாதையாகக் கருதி அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதே பாதுகாப்பானது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இதன்படி, ரசாயனங்கள் கலந்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் வகைகள், பிஸ்கட்கள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களைத் தவிப்பது முதல் கட்டமாகும். அதற்கு மாற்றாக, வீட்டில் சமைத்த சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், உடலில் கொழுப்பாக மாறும் கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக்கொண்டு, அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை தாரக மந்திரமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.



