தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, ஊரகப் பகுதிகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், மாநில தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை காளான் சாகுபடிக்கு மிகப்பெரிய ஊக்கமளித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் காளான் வளர்ப்பை ஒரு லாபகரமான மாற்றுத் தொழிலாக மாற்றும் நோக்கில், அரசு தற்போது தாராளமான மானிய உதவிகளை அறிவித்துள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தி அலகுகளை அமைக்க திட்ட மதிப்பில் 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடங்களை அமைக்க முன்வரும் பயனாளர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரையிலும், வணிக ரீதியாக பெரிய அளவிலான அலகுகளை அமைக்க விரும்புவோருக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் கிடைக்கிறது. இந்த நிதியுதவி, ஆரம்பக்கட்ட உள்கட்டமைப்பு செலவுகளை கணிசமாக குறைக்க உதவும்.
யாரெல்லாம் பயன்பெறலாம்..?
கிராமப்புற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். காளான் சாகுபடிக்கு அதிக நிலப்பரப்போ அல்லது கடும் உழைப்போ தேவையில்லை என்பதால், பெண்கள் மற்றும் சிறிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் தமிழகத்தில் காளான் உற்பத்தியை அதிகரித்து, சந்தையில் நிலவும் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்த மானிய திட்டத்தின் பயனைப் பெற விரும்புவோர், தங்கள் பகுதியில் உள்ள மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் அரசின் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, குறைந்த காலப்பகுதியில் அதிக லாபம் ஈட்டும் காளான் சாகுபடியில் தடம் பதிக்கலாம்.



