திங்கள்கிழமை நள்ளிரவில், 25 வயது பெண்ணின் இரவு நேர பயணம், கொடூர கனவாக மாறியுள்ளது. குர்கான் – பாரிதாபாத் சாலையில் சென்ற வேனில், இரண்டு ஆண்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, 12 தையல்கள் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்று மணி நேரம் வேனில் அடைத்து வைத்து கொடுமை
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக காட்சித் தெளிவு குறைந்த நிலையில், அந்தப் பெண்ணை சுமார் மூன்று மணி நேரம் வேனில் அடைத்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.. உதவி பெற எந்த வாய்ப்பும் இல்லாமல், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள் வழியாக வாகனம் இயக்கப்பட்டதாகவும், செவ்வாய்க்கிழமை அதிகாலை அவரை நகரும் வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் லிப்ட் ஏற்றுக் கொண்டதால் நேர்ந்த சோகம்
திங்கட்கிழமை மாலை 8.30 மணியளவில், தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், இரண்டு – மூன்று மணி நேரத்தில் திரும்புவதாக தனது சகோதரியிடம் கூறியிருந்தார். ஆனால், தாமதமாகி நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பும்போது, போக்குவரத்து வசதி இல்லாததால், வேனில் இருந்த இரண்டு ஆண்கள் லிப்ட் தருவதாக கூறியதை அடுத்து அதில் ஏறியுள்ளார்.
அவர்கள் வீடு செல்லாமல், வண்டியை குர்கான் – பாரிதாபாத் சாலைக்கு திருப்பியதாக கூறப்படுகிறது. ஹனுமான் கோயிலை கடந்த பகுதியில், அந்தப் பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. சாலை வெறிச்சோடிய நிலையில், அடர்ந்த பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக, உதவி கேட்டு அவர் எழுப்பிய குரல்கள் யாருக்கும் கேட்கப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில், எஸ்ஜிஎம் நகர் ராஜா சௌக்கில் உள்ள முலா ஹோட்டல் அருகே, அந்தப் பெண்ணை நகரும் வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் இருந்த அவர், உடனே தனது சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சகோதரி விரைந்து வந்து, அவரை பாரிதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் பாரிதாபாதிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவர் கைது – விசாரணை தீவிரம்
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரிதாபாத் குற்றப்பிரிவு போலீசார் இரு சந்தேகநபர்களை பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை மற்றும் சான்றுகள் சேகரிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், குறிப்பாக நள்ளிரவு நேரங்களில், கண்காணிப்பு குறைந்த சாலைகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Read More : இரவு முழுக்க ஆபாச மெசேஜ்.. வீடியோ கால்.. ஆசிரியர்கள் செய்ற வேலையா இது..? மாணவி கதறல்..



