13 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலாநகர் பகுதியில் 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த புதன் கிழமை இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் அவரிடம் பேசியுள்ளனர். அப்பகுதியில் பார்ட்டி நடைபெறுகிறது.. அங்கே செல்லலாம் வா.. என்று அந்த சிறுமியை அழைத்துள்ளனர். இளைஞர்களின் பேச்சைக் கேட்டு சிறுமியும் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டி நடந்து முடிந்து அனைவரும் கிளம்பி சென்ற நிலையில், அந்த 2 இளைஞர்களும் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கத்தில் இருந்த சிறுமியை இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதுமே சிறுமியை சிறைபிடித்து வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, சிறுமியை காணவில்லை என பெற்றோர் பதறிய நிலையில், உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுநாள் காலையில் அந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.