கேரள மாநிலம் கொல்லத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் அரிக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜன்பாபு (54), அந்தப் பகுதியில் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்துள்ளார். இவரை நம்பி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது 16 வயது மகளுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி பயமுறுத்திய ராஜன்பாபு, அதனை விரட்ட தனி அறையில் வைத்து ரகசியப் பூஜை நடத்த வேண்டும் என நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்தத் தாய், தனது மகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் சிறுமியைத் தனி அறையில் பூட்டி வைத்த ராஜன்பாபு, மாந்திரீகம் என்ற பெயரில் அந்தச் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் பதற்றமடைந்த தாய், கதவைத் திறந்து பார்த்தபோது சிறுமி கதறி அழுதுகொண்டே வெளியே ஓடி வந்துள்ளார். அந்தப் போலி ஜோதிடர் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதை சிறுமி விவரித்ததும், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஜோதிட நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ராஜன்பாபு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், புத்தூர் போலீசார் ராஜன்பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இறுதியில் பரணிக்காவு கோவில் ஒன்றில் பதுங்கியிருந்த அவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், சம்பவம் நடந்த அறையில் ரத்தக் கறைகள் கண்டறியப்பட்டதாக வெளியான தகவல், இந்த வழக்கின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : “தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கா”..? பிரேமலதா விஜயகாந்துக்கு சவால் விட்ட ப்ளூ சட்டை மாறன்..!!



