சென்னையில் இருந்து சென்ற இளைஞர்கள் யூடியூப் சேனலுக்காக வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 10 பேர், யூடியூப் சேனலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் படவேடு செண்பகத்தோப்பு மற்றும் வனப்பகுதிகளில் வீடியோ எடுப்பதற்காக நேற்று மாலை சென்றனர். இவர்கள் அனைவரும் படவேடு ராமர் கோவில் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் தங்கி இருந்து யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுத்தனர். இதையடுத்து ராமர் கோயில் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீவர்சன் என்பவர், ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து நீரில் மூழ்கிய ஸ்ரீவர்சனை கண்டு சென்னை கீழ்கட்டளையைச் சேர்ந்த ராமபுத்திரன் என்பவரும் நீரில் இறங்கியுள்ளார். இருப்பினும் ஆழமான பகுதிக்கு சென்ற இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களி, இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.