கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆலந்தூரை சேர்ந்த பிரதேஷ் என்ற இளைஞர் அரசு வேலைக்கு தீவிரமாக படித்து வருகிறார். இதற்கிடையே, ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (33 ) என்ற பெண், பிரதேஷ்க்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது நான் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன், உங்களுக்கு குருவாயூர் கோயிலில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ரேஷ்மா கூறியுள்ளார். ஆனால், அதற்கு கொஞ்சம் பணம் தேவை, பலருக்கும் பணம் கொடுத்தால்தான் வேலை பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.
அரசு வேலைக்கு படித்துவந்த பிரதேஷ், குறுக்கு வழியில் செல்ல ஆசைப்பட்டு, ரேஷ்மாவின் பேச்சை நம்பி ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட காலமாகியும் வேலை கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் மேலாக அவரால், ரேஷ்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதேஷ், இதுகுறித்து ஆலந்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். ரேஷ்மா குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணையில், ரேஷ்மா தன்னை அரசு அலுவலர் போலவே, தான் வைத்திருந்த காரிலும் கோயில் நிர்வாக விஜிலென்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியே வலம் வந்துள்ளார். வேலை தேடி வரும் இளைஞர்களை மற்றும் இளம்பெண்களை குறிவைத்து அவர்களிடம் இருந்து பண மோசடி செய்வதை தொழிலாக கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்தும் மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். கடந்த மாதம் திருமணத்துக்கு வரன்தேடி, இணையத்தில் பதிவிட்ட இளைஞரை தொடர்புகொண்டு ரேஷ்மா பேசியுள்ளார். அப்போது உங்களை எனக்கு பிடித்துள்ளது நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தேவை. எனக்கு கடன் சிக்கல்கள் இருப்பதால் அதனை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரின் காதல் வார்த்தைகள் விழுந்த அந்த இளைஞர் கடனை கொடுத்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசையில் உடனே பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றவுடன் மறுநாளில் இருந்து ரேஷ்மாவை தொடர்புகொள்ள முடியவில்லை. அந்த இளைஞரும் காவல்துறையில் புகார் அளித்தது தெரியவந்தது. இப்படி பல மோசடி வழக்குகளில் தேடப்பட்டுவந்த ரேஷ்மா, ஆலந்தூரில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற பதுங்கி இருந்த ரேஷ்மாவை கைது செய்தனர்.