சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் தமிழக காவல்துறை சார்பில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தான் நடத்தப்பட்டது.
தமிழக காவல்துறை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “ பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது.
வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும் சைபர் துறை வல்லுநர்களின் உதவி இன்றியமையாததாக உள்ளது. புலன் விசாரணையிலுள்ள வழக்குகள் தொடர்பாக சைபர் துறை வல்லுநர்களின் உதவியை பெறும் வகையில், குற்றப்புலனாய்வு துறையானது Selfmade Ninja Academy மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி உடன் இணைந்து 80 வகையான கடினமான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தானை அறிவித்தது.
இந்த ஹேக்கத்தானில் இந்தியா முழுவதிலிருந்து 2400 பேர் பதிவு செய்து, டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற முதல்நிலை போட்டிகளில் பங்கேற்றனர். அவர்களுள் முதல் 50 அணிகளைச் சார்ந்த 178 சைபர் வல்லுநர்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதி போட்டியில் கலந்து கொண்டனர்.
தற்காலத்தில் நிகழும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 35 சிக்கல்களில் அதிகமானவற்றிற்கு தீர்வு கண்ட, 3 அணியினருக்கு முறையே ரூ75,000, ரூ50,000 மற்றும் ரூ25,000 ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. யுக்தி 2.0 ஹேக்கத்தானில் அடையப்பெற்றுள்ள முடிவுகள் தமிழ்நாடு காவல்துறையில் உதவியாக திகழும். உள்ள சிக்கலான வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



