நாடு முழுவதும் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 7% சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. இதேபோல், முந்தைய ஆண்டு ரூ.1,17,212 கோடியாக இருந்த சரக்கு வருவாய், தற்போது ரூ.1,35,387 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 129.12 மில்லியன் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்து 2023 ஜனவரி மாதம் 134.07 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4% சதவீதம் அதிகமாகும். மேலும் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.13,172 கோடியாக இருந்த சரக்குப் போக்குவரத்து வருவாய், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.14,709 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 13% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.