அடுத்த 5 ஆண்டுகளில் 1,500 கிமீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலீடுகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், சாலைக் கட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களை வலுப்படுத்தவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் குறித்த முன்மொழிவின் ஒரு பகுதியாக ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் மேனஜர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவியுள்ளது.
இந்த நிறுவனத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார்.பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐடிபிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, எஸ் வங்கி, பஜாஜ் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களுடன் ராஜ்மாக் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையகத் தலைவர் சந்தோஷ் குமார் யாதவ், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 1,500 கிமீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று கூறினார்.



