தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதிலும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை காவல்துறை தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரையில், 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. 4943 லிட்டர் ஊரல் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. கள்ள சந்தையில் விற்கப்பட்ட 16,493 ஐ.எம்.எஃப்.எல் பாட்டில்கள் மற்றும் 218 லிட்டர் கைப்பற்றப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த வருடம் இதுவரையில், 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55,173 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 4534 பேர் பெண்கள் இந்த வருடம் இதுவரையில் 2,55078 லிட்டர்கள் சாராயம் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு நடுவே விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மற்றும் மலை, வனப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்தவும் சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.