மிஸ் உலகம் 2025 பட்டத்தை தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றுள்ளார். இதன் மூலம் மிஸ் உலக கிரீடம் ஆசிய கண்டத்திற்கு வந்துள்ளது. இறுதிச் சுற்றில் மார்ட்டினிக் (அரெல்லி ஜாவோச்சிம்), எத்தியோப்பியா (ஹசெட் டிரெஜ் அட்மாசு), போலந்து (மஜா லாட்ஜா), தாய்லாந்து (ஓபல் சுசாதா சௌங்ஸ்ரி) ஆகியோர் இடம்பிடித்தனர். இவர்களில் இறுதி வெற்றியாளராக மிஸ் தாய்லாந்து ஓபல் சுசாதா அறிவிக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்தனர். அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.
இதில், தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா மிஸ் உலக கிரீடத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு தற்போதைய உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா முடிசூட்டினார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்பாக எத்தியோப்பிய அழகி ஹசெட் டிரெஜ், இரண்டாம் ரன்னர் அப்பாக போலந்து அழகி மஜா லாட்ஜா, மூன்றாம் ரன்னர் அப்பாக மார்ட்டினிக் அழகி அரெல்லி ஜாவோச்சிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஓபல் சுசாதாவின் வயது 21. புதிய மிஸ் உலகமாகத் தேர்வாகி சாதனை படைத்த இந்த இளம் அழகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த உலக அழகி கிரீடம் ஒரு தலைசிறந்த படைப்பு! 1770 சிறிய வைரங்கள், ஒரு பிரமிக்க வைக்கும் 175.49 காரட் நீலக்கல் மற்றும் 18 காரட் வெள்ளை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த கிரீடத்தின் மதிப்பு தோராயமாக ரூ.3 கோடி ஆகும். கம்பீரமான நீல நிறம் அமைதி, ஞானம் மற்றும் விசுவாசத்தை குறிக்கிறது. ஆனால் இந்த கிரீடம் ஒரு ஆரம்பம் மட்டுமே, 2025 உலக அழகி வெற்றியாளர் ரூ.1.15 கோடி பரிசையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வார், இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.
மிஸ் உலக கிரீடத்தை வென்ற பிறகு ஓபல் பேசுகையில், “இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. மாற்றத்திற்காக பாடுபடும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. மிஸ் உலக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் மிஸ் உலகமாக எனது நேரத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக செலவிடுவேன்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு அவரது மனிதநேய பணிகளை கவுரவிக்கும் விதமாக மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அழகிப் போட்டி இந்தியாவில் 1996, 2024 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாகவும், ஹைதராபாத்தில் முதல் முறையாகவும் நடத்தப்படுகிறது.
யார் இந்த ஓபல் சுச்சாட்டா? – தாய்லாந்தின் புக்கட் தீவைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர். மேலும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் மூன்றாவது ரன்னர் ஆக தேர்வானார். தற்போது அவர் தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் படித்து வருகிறார்.
Readmore: நந்தி பகவானின் எந்தக் காதில் உங்கள் விருப்பத்தை சொல்லவேண்டும் தெரியுமா?.