மேற்கு சூடானின் வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள பகுதிகளில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர்
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
துணை ராணுவம் தலைநகர் கார்டூமின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தலைநகரை கைப்பற்ற ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்குப்பின் துணை ராணுவத்தின் பிடியில் இருந்த தலைநகர் கார்டூமை ராணுவம் மீட்டது.
இந்தநிலையில், மேற்கு சூடானின் வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள பகுதிகளில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர் என்று தன்னார்வலர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை “அனைத்து மனிதாபிமான விதிமுறைகளையும் சர்வதேச மரபுகளையும் மீறும் ஒரு மிருகத்தனமான தாக்குதல்” என்று சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
Readmore: அடங்காத இஸ்ரேஸ்!. வான்வழித் தாக்குதலில் 100 பேர் பலி!. காசாவில் இறப்பு எண்ணிக்கை 58,000-ஐ தாண்டியது!