அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு அவினாசி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது.. இந்த விழாவின் பேனரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று பொதுவெளியில் ஆதங்கமாக தெரிவித்திருந்தார்.
அப்போது முதலே இபிஎஸ் – செங்கோட்டையன் விவகாரம் பேசு பொருளானது.. மேலும் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக மேலிடத்தை சந்தித்து பேசி வந்தார்.. மேலும் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, செங்கோட்டையனை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது.. இதனால் அவர் தான் அதிமுக பொதுச்செயலாளர், என்று கூட கூறப்பட்டது.
ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ வரும் 5-ம் தேதி அன்று கோபிச்செட்டிப்பாளையம் கழக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப் போகிறேன்.. அப்போது என்ன கருத்துகளை சொல்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதுவரை பொறுத்திருங்கள்..” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. ஒருவேளை அவர் அதிமுகவில் இருந்து விலகும் பட்சத்தில் அவரிடம் இருக்கும் வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..
அதன்படி, பாஜகவிலோ அல்லது திமுகவிலோ நிச்சயம் செங்கோட்டையன் இணைய மாட்டார் என கூறப்படுகிறது.. அதிமுக பிரிந்து கிடப்பதால் அனைவரையும் ஒன்றிணைக்கவே செங்கோட்டையன் இபிஎஸ்-இடம் வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதாவது ஓபிஎஸ், தினகரன், சசிகலா என அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட்டால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் அதற்கு இபிஎஸ் இறங்கிவர வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது..
இப்படி பிரிந்திருந்தால் அதிமுகவுக்கு எதிர்காலமே இருக்காது எனவும், ஒன்றிணைந்த அதிமுக தான் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் எனவும் செங்கோட்டையன் நினைப்பதாகவும் தெரிகிறது.. ஓபிஎஸ், தினகரன், சசிகலா என யாரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் கூறி வரும் நிலையில், செங்கோட்டையனின் திடீர் முடிவு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.. எனினும் இபிஎஸ் கட்சியின் நலனுக்காக யோசித்து இறங்கி வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



