தமிழகம் முழுவதும் 2,498 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் 2,498 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாய பெருமக்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 16 இலட்சம் மெ.டன் அளவிற்கு நடப்பு கொள்முதல் பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய பெருமக்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற்று, முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு இணையதள வாயிலாக 100 சதவீதம் நெல் கொள்முதலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாய பெருமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளுக்கான மொத்த தொகையும் சம்பந்தப்பட்ட விவசாய பெருமக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய பெருமக்களிடமிருந்து கையூட்டு பெறுவதாக புகார்கள் வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய மாதங்களில் இதுபோன்று வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட 90 நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கடந்த வாரம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பதிவாளர் தலைமையில் 9 விழிப்பு பணிக்குழு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதிரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
