சேலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 25 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி போன்றவற்றால், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், கொரோனா தொற்றுக்கு சேலத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் சேத்துக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜேசிபி ஆபரேட்டர் தமிழரசன் (25). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தமிழரசனை பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் கூறுகையில், “தமிழரசனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு இணை பாதிப்புகள் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
Read More : தவெக தலைவர் விஜய்க்கு புதிய புனைப்பெயர்..!! வைரலாகும் புகைப்படம்..!! கொண்டாடும் ரசிகர்கள், தொண்டர்கள்..!!