தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (34) என்பவர் கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 28) இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சிவா, மனைவி மீது தாக்குதல் நடத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், அவர் குற்றவாளி எனவும் நீதிபதி விஜய் ராஜ்குமார் தீர்ப்பளித்தார். தொடர்ந்து, குற்றவாளி சிவாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குடும்ப வன்முறைகளுக்கு எதிரான ஒரு முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து, வழக்கைச் சிறப்பாக கையாண்ட அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், முதல் நிலை காவலர் ஆனந்த ஜோதி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகள் தெரிவித்தார்.