இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1991இல் வெளியான திரைப்படம் சின்ன தம்பி. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 32 ஆண்டுகளாகிறது. அன்றைய காலகட்டத்தில் மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமாக சின்னத் தம்பி அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியதாக கூறப்படுகிறது. தூலியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம் என இளையராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மாலைக் கண் நோய் பிரச்சனையுடன் அவதிப்படும் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்.
இந்நிலையில், இப்படம் தொடர்பாக நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், ”சின்ன தம்பி படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை என்னால் நம்ப முடியவில்லை. என் மீது காட்டப்பட்ட அன்புக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன். என் இதயம் எப்பொழுதும் பி.வாசு சாருக்காகவும் பிரபு சாருக்காகவும் துடிக்கும். இந்தப் படத்துக்கு உயிரோட்டமான பாடல்களை அளித்த இளையராஜா சாருக்கும், மறைந்த தயாரிப்பாளர் கே.பாலு சாருக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். நந்தினி கதாப்பாத்திரம் அனைவரது மனதிலும் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.