எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு ஆகிய இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்வுக்கு ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை https://tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாகவும், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேரடியாகவும் நடைபெற்றது.
முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. அதன்படி, இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்கள், மாணவர்கள் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடங்கவுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் எச்சரிக்கும் வகையில் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.



