மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறுக்காக சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பிறப்பு, இறப்பு, கருக்கலைப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பியிருந்தார். அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அவருக்கு முக்கிய தகவல்களை அளித்தது. அதில், கடந்த 2019இல் தொடங்கி 2022 வரை மட்டும் 60,717 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களிக் 1,015 குழந்தைகள் இரட்டையர்கள். இதே காலகட்டத்தில் 4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2022இல் மட்டும் அதிகமாக 1,413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

அறுவைச் சிகிச்சை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 21,685 குழந்தைகள் பிறந்துள்ளது என்றும், இதில் மொத்த பிரசவத்தில் 64 விழுக்காடு சுகப்பிரசவம் என்றும் ஆர்டிஐ தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் பிரசவத்தின்போது மட்டும் 197 தாய்மார்கள் இறந்துள்ளதாகவும், அதில் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 69 பேர் அதிகமாக இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.