சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்வின் போது குளத்தில் 25 பேர் இறங்கி குளித்தனர். இவர்கள் அனைவரும் அர்ச்சகர்கள் என்று சொல்லப்படுகிறது. அப்போது, 3 பேர் குளத்தில் இறங்கி தீர்த்தவாரிக்காக மூழ்கிய போது நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கி தத்தளித்தனர். இவர்களை காப்பாற்ற முயன்ற போது இருவர் நீரில் மூழ்கினர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் 5 பேரின் உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராகவன், லோகேஷ்வரன், வனேஷ், சூரியா, ராகவன் உள்ளிட்ட 5 பேர் என்பதும், 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இருவர் கல்லூரி படிப்பதாகவும், மற்றவர்கள் வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அனைவரின் உடலும் குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பழவந்தாங்கல் போலீசார் தரப்பில் தீர்த்தவாரி குளத்தில் இறங்கும் நிகழ்வு குறித்து அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.