விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37) இவர் கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் 8ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈஞ்சார் சாலையில் இவர் பயணித்துக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 3/4 பவுன் தங்கச் செயின், செல்போன், 130 ரூபாய் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது.
இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சித்துராஜாபுரத்தைச் சேர்ந்த அழகுராஜ் (26) முனீஸ் நகரைச் சேர்ந்த பாலசங்கர்(26), துலுக்க பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி செல்வன் ஜேசுராஜ் குற்றவாளிகளான அழகுராஜுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 6500 அபராதமும், பாலசங்கர், கருப்புசாமி உள்ளிட்டோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.