ஏதாவது ஒரு துறையில் சாதித்தவர்களை மையமாக கொண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்டும் ஏராளமான படங்களை, திரையுலகம் கண்டுள்ளது. ஆனால், ஒரு திருடனை ரோல் மாடலாக கொண்டு 2008இல் பாலிவுட்டில் oye lucky lucky oye என்று ஒரு திரைப்படம் வெளியானது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஒரு படமே எடுக்கும் அளவுக்கு, கடந்த 30 ஆண்டுகளாக வட மாநிலங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன் போலீசுக்கு போக்குகாட்டி வந்த அந்த திருடன் பெயர் தேவேந்தர் சிங்.
தனது 14 வயதில் திருட்டு தொழிலை தொடங்கியவர் தான் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தேவேந்தர் சிங். 1993இல் முதல் நாட்டின் பல்வேறு இடங்களில் இவர் மீது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும் பணக்காரர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்வோர் தான் இவரின் முதல் இலக்கு. அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், கார்களை திருடுவது வழக்கம். சொத்து வாங்குவது, சேர்ப்பது என்பது போன்ற ஆசைகள் எல்லாம் இவருக்கு கிடையாது. 5 நட்சத்திர ஹோட்டல்களில் அதிக கட்டணம் கொடுத்து சொகுசாக தங்கி நேரத்தை கழிப்பது மட்டும் தான் மிகப்பெரிய பலவீனமாம்.
சண்டிகர், சென்னை, டெல்லியில் பலமுறை சிக்கி இருந்தாலும், கைவிலங்கை திறந்து அவர்களிடம் இருந்து லாவகமாக தப்பிப்பது தான் இவரின் பலம். கடந்த 2010இல் நடந்த பிரபல பிக்பாஸ் ஷோவில் பங்கேற்பாளராக பிரபலமடைந்த தேவேந்தர், சல்மான் கானுடன் ஏற்பட்ட மோதலால் பாதியில் வெளியேற்றப்பட்டார். இப்படி அவ்வப்போது பேசுப்பொருளாகி வந்த தேவேந்தருக்கு முதல் சறுக்கலை ஏற்படுத்தியது, கேரளாவில் அடுத்தடுத்து அரங்கேற்றிய திருட்டுகள் தான். திருவனந்தபுரத்தில் தொழிலதிபர் வேணுகோபாலன் நாயரின் உயர் பாதுகாப்பு வீட்டிற்குள் புகுந்து திருடிய நிலையில், ஆங்காங்கே விட்டுச் சென்ற தடயங்களை அடிப்படையாக கொண்டு புனேவில் தேவேந்தரை கேரள போலீசார் கைது செய்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்தவர், மீண்டும் டெல்லியில் உள்ள 2 வீடுகளில் கைவரிசை காட்டிய நிலையில், அவர் திருடிச் சென்ற காரின் பதிவெண்ணை கொண்டும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்தியதை கண்காணித்தும் சுமார் 500 கிமீ தூரத்துக்கு போலீசார் துரத்தி சென்றனர். நேபாளம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அந்த காரை மடக்கி பிடித்து கண்ணாடியை உடைத்து தேவேந்தரை கைது செய்தனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு எடுத்துக்காட்டாய், போலீசாருக்கு போக்கு காட்டி வந்த 53 வயது பலே திருடன், வசமாய் போலீசிடம் சிக்கியது, oye lucky lucky oye பார்ட் 2-வுக்கான சூப்பர் கதையாகி உள்ளது.