உலகம் முழுக்க பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த கணவன் தன்னுடைய மனைவிக்கு சர்ப்பரைஸ் கொடுக்கும் விதமாக செய்த நிகழ்வுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அதாவது, Vall என்ற அந்த நபர் தன் மனைவி மீதான காதலை நிரூபிக்கும் விதமாக மறக்க முடியாத காதலர் தின பரிசாக தங்களுடைய திருமண சான்றிதழையே கையில் டாட்டுவாக குத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஃப்ரேமை கொண்ட அந்த திருமண சான்றிதழை அரசாங்கத்தின் முத்திரயைக்கூட விட்டு வைக்காமல் கையின் முன் பக்கத்தில் பச்சைக் குத்தியிருக்கிறார் அந்த கணவர்.

மத்திய தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தில் உள்ள கேங் கோய் பகுதியில் உள்ள டாட்டு ஸ்டுடியோவில் 8 மணிநேரம் செலவழித்து இந்த டாட்டுவை போட்டுள்ளார். கணவரின் கையில் போடப்பட்டிருந்த டாட்டுவை கண்ட அதிர்ச்சிக்குள்ளான அவரது மனைவி தன் மீதான அவரது காதலை எண்ணி நெகிழ்ந்துப்போயிருக்கிறார். vall-க்கு டாட்டு போட்டுவிட்ட அந்த டாட்டு கலைஞர் பேசுகையில், “இதுவரை 8 மணிநேரத்துக்கெல்லாம் நான் டாட்டு போட்டுவிட்டதே இல்லை. முதலில் திருமண சான்றிதழில் இருக்கும் டிசைனை அவரது கையில் அச்சாக வைத்து எங்கேயும் எந்த பிசிறும் தட்டாமல் கவனமாக டாட்டு போட்டிருக்கிறேன்” என கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.