கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் என்ற சிறிய கிராமத்தில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தாண்டீஸ்வரன் கோவில், ஆன்மிக சிறப்புகளாலும் வரலாற்று பெருமைகளாலும் பக்தர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்த கோவிலில் இரவு நேரங்களில் சித்தர்கள் வந்து சிவனை வழிபடுகின்றனர் என்ற நம்பிக்கை, இந்த தலத்திற்கு தனித்துவமான பெருமையை அளிக்கிறது.
இந்த கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 1274ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. அவற்றில் சோழ மன்னர் வீரராஜேந்திர சோழன் இந்த பகுதியை ஆட்சி செய்ததும், கோவிலுக்கு நிலம் தானமாக வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த தலம் சோழர் கால கட்டிடக்கலை மற்றும் ஆன்மிக மரபுகளை பிரதிபலிக்கும் முக்கிய இடமாக விளங்குகிறது.
இந்த கோவிலின் முக்கிய சிறப்பாக, அரிய வகையைச் சேர்ந்த சிவலிங்கம் உள்ளது. 16 பட்டைகள் கொண்ட மகா லிங்க வடிவம் இந்தியாவில் வெறும் சில தலங்களில் மட்டுமே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அவற்றில் ஒன்றாக இந்த சித்தாண்டீஸ்வரன் கோவில் திகழ்கிறது. இதனால், இந்த லிங்கத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
மேலும், பெரும்பாலான சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கி அமைந்துள்ள நிலையில், இந்த கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜோதிட மற்றும் ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். இதனால், பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வருவது அவசியமாகிறது.
Read more: மாதவிடாய் விடுப்பு பெண்களின் அடிப்படை உரிமை..! – ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு..!



