கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்தம் வாகையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் என்கின்ற செந்தாமரை(43). இவர் அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு பாதிக்கப்பட்ட சிறுமி அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை தன்னுடைய தந்தையிடம் தெரிவித்து விட்டு உடனடியாக வீட்டிற்குள் ஓடி சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ராமநத்தம் காவல் துறையினர் செந்தாமரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தான் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட சிறுமியின் உறவினர்கள் செந்தாமரையின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் மேலும் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.