அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரு மண்டபத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எழுந்த உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நாளை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்டபத்தின் அரங்கத்தில் கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழு, தற்போது மண்டபத்தின் திடலில் நடைபெறுகிறது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை முதல் மண்டபம் அமைந்திருக்கும் இடம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அடங்கிய பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்காக பிரம்மாண்டமாக தனித்தனி மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் 9.15 மணிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீவாரு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற பேனர்கள் முழுவதுமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.