கோவையில் ஒரு பிரைவேட் மில்லில் வேலை செய்யும் சிறுவன் ஒருவன், நேற்று முன் தினம் விடுமுறைக்காக தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு செல்ல, கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு பஸ் இல்லாததால் திண்டுக்கலுக்கு வந்துள்ளார். திண்டுக்கல் வந்து பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அந்த சிறுவனிடம் வந்து காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று கூறி உதவி கேட்டுள்ளார். அந்த சிறுவனும் பணம் கொடுத்து உதவினார். அதை வாங்கிக் கொண்ட சிறுமி அங்கிருந்து சென்று விட்டார்.
பிறகு சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சிறுமி அந்த சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு அந்த சிறுவன், அந்த சிறுமியை பஸ்ஸில் பழனிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு என்ன செய்வது என்று தெரியாததால், பிறகு மீண்டும் திண்டுக்கல்லுக்கு இருவரும் வந்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் எங்கு செல்வது என்று தெரியாததால் திண்டுக்கல் பஸ் நிலையத்திலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை காணாமல் அவருடைய பெற்றோர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் சிறுமியை தேடி உள்ளனர். மேலும் சிறுமி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அந்த சிறுவனும், சிறுமியும் தூத்துக்குடிக்கு செல்வதற்காக மதுரைக்கு சென்றனர். அங்கு தூத்துக்குடி பஸ்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு சென்றபோது, சிறுமையின் உறவினர்கள் இரண்டு பேரையும் பார்த்து விட்டு விசாரித்தனர். அதன் பிறகு அவர்கள் அளித்த தகவல் புகாரின் பேரில் மதுரை காவல்துறையினர் இரண்டு பேரையும் திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிறுமையை கடத்தி சென்றதாக சிறுவன் மீது திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.