மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருக்கும் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மக்கள் பவானி வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து பவானி நகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.