தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில் பாலாஜியும் உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு கடிதம் எழுதியதாக கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த கடிதத்தைக் காட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும், மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20% சதவிகித கமிஷன் பெறுவதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், செந்தில் பாலாஜி 2ஆம் இடத்திலும் உள்ளதாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் உற்பத்தித் திறனை அரசு குறைத்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெறுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் ரூ.4,600 கோடிக்குத் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4% கமிஷனாக ரூ.220 கோடி பெறுவதாகக் கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி ஒவ்வொரு மாதமும் ஒரு பொய் சொல்வதாகத் தெரிவித்த அவர், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.492 கோடிக்கு நிலக்கரி வாங்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், இன்னும் 40 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சி தான் என்றும் கூறினார்.