அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது..
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது..
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முறையிட்டு வருகின்றனர்.. எனினும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவரும்.. இதனிடையே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..
இதற்கிடையே, பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பொதுக்குழு கூட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை. எனவே பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது..
அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த நாளை விசாரணைக்கு வர உள்ளது.. இந்நிலையில் அதிமுக தலைமை நிலையம் சார்பில் புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..