கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருக்கும் எடையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவர் தனக்கு சொந்தமான காரை சரி செய்வதற்காக திருக்கோவிலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். கோவிந்தனின் காரை அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ்(28) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன் அவரது நண்பர் பிரபு(32) என்பவர் சென்று இருக்கிறார்.
திருக்கோவிலூர் வந்து காரை சரி செய்து கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய போது திருக்கோவிலூர், சங்கராபுரம் சாலையில் அய்யனார் கோவில் அருகில் செல்லும் போது காரின் முன்பக்கம் திடீரென புகை வந்துள்ளது. இதை கண்ட சிவராஜ் உடனே காரை பிரேக் போட்டு நிறுத்தி உள்ளார். அதற்குள் கார் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி தப்பித்தனர்.
சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது பற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.