குரங்கம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை நோய் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”குரங்கம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய-மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கு அம்மைக்கு எதிராக சரியான தடுப்பூசியைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது விஞ்ஞானிகள் குரங்கு அம்மை வைரஸை தனியாக அடையாளம் கண்டு பிரித்துள்ளனர். அதனால், அவர்கள் விரைவில் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

குரங்கு அம்மை தொடர்பாக விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸை எதிர்கொண்டதில் இருந்த அனுபவத்தைக் கொண்டு குரங்கு அம்மையை கண்காணிக்க மத்திய குழு அமைத்துள்ளது. குரங்கு அம்மை இந்தியாவிலும், உலகிலும் புதிய நோய் அல்ல. 1970களில் இருந்தே இந்த வகை வைரஸ் பாதிப்பை உலகம் எதிர்கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை மீது கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இந்தியாவும்தான். கேரளாவில் முதல் குரங்கு அம்மை தொற்றாளர் கண்டறியப்படும் முன்னரே மாநிலங்களுக்கு குரங்கு அம்மை தடுப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.