முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி உள்பட கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக அதிகரித்துள்ளது. கனமழை இதுபோன்று தொடர்ந்தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மிகவேகமாக உயரும். இந்த சூழலில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்து பாதுகாப்பான அளவிற்கு நீர் மட்டத்தை பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, முல்லைபெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை கருத்தில் கொண்டு, அணையின் நீர்வரத்தைவிட அதிக அளவு நீரை அணையிலிருந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சர் முக.ஸ்டாலினை, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முல்லைப்பெரியாறு அணையியிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.