கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக செர்பி வீரர் நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அமெரிக்கா அனுமதி மறுத்த நிலையில், ஜோகோவிச் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் மட்டுமே அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
முன்னதாக நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் இம்மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி சர்வதேச டென்னிஸ் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா காயம் காரணமாக விலகியுள்ளார். அதேபோல், ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், கர்ப்பம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகியிருக்கிறார்.