”ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்றிருப்பார்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். தொண்டர்களை நம்பி அதிமுக தொடங்கப்பட்டதே தவிர, தலைவர்களை நம்பியோ, எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை நம்பியோ தொடங்கப்படவில்லை. அதிமுகவை தொண்டர்களை நம்பித்தான் தலைவர் எம்ஜிஆர் தொடங்கினார். பன்னீர்செல்வம் உத்தமன் போல பேசும் மகா நடிகர். அவர் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர்செல்வம் செயல்பட்டார்.

மேலும், அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வத்துக்கு, அதிமுகவில் என்றுமே இடம் கிடையாது. கரந்த பால் மடியேறாது.. கருவாடு மீனாகாது.. பன்னீர்செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் எதுவும் அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பன்னீர் மேற்கொள்வது மிரட்சி பயணம். ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு. ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் சசிகலா, விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளிக்காத்து ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.